கருஞ்சீரகத்தின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. கருஞ்சீரகத்தை, வறுத்தோ அல்லது வறுக்காமலே நம் உணவுகளில் பயன்படுத்தி வருகிறோம். கருஞ்சீரகம், பென்னல் பிளவர், பிளாக் காரவே நட்மக் பிளவர், ரோமன் கொரியாண்டர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்களும் அதிகளவில் உள்ளன.

கருஞ்சீரக எண்ணெயில், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மினரல்கள் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், 17 சதவீத புரதமும், 26 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் மற்றும் 57 சதவீதம் தாவர எண்ணெய்களும் உள்ளன. எனவே, கருஞ்சீரகத்தை பொடியாக்கி வைத்துக்கொண்டு அளவாக உட்கொள்ள நல்ல பல மருத்துவ பலன்களை அளிக்கும். அவற்றில் ஒருசிலவற்றை பார்ப்போம். குழந்தை பெற்ற பெண்களின் வயிறு இறுக்கம் அடைய கருஞ்சீரகப்பொடியை கஞ்சியுடனோ, தேனுடனோ கலந்து சாப்பிடலாம்.

இதன் பொடியைச் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும். வயிறு உப்புசம் குறையும். மோருடன் கலந்து சாப்பிட்டால் பசியைத் தூண்டும்.அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கால் லிட்டர் நல்லெண்ணெயுடன் கால் கப் கருஞ்சீரகத்தை சேர்த்துக் காய்ச்சி தலையில் தேய்த்து குளிக்கலாம். இருவேளை கருஞ்சீரகப் பொடியைத் தேனுடன் கலந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும். முகப்பரு, அதன் தழும்புப்மறைய இதன் பொடியை நீராகத்துடனோ, எலுமிச்சைச் சாறுடனோ கலந்து முகப்பருவில் தடவி ஊறிய பின் குளிக்க, முகம் பளிச்சிடும்.

உடல் பருமன் உள்ளவர்கள் கருஞ்சீரகப் பொடியுடன் நெல்லிக்காய் பொடியை சேர்த்து வெந்நீரில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட வயிற்றின் ஊளைச் சதை, பருமன் குறையும். வெள்ளைப்பூண்டுச்சாறுடன் தேன் கலந்து, கருஞ்சீரகப் பொடியையும் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும். மறதி, மன அழுத்தத்தை குணப்படுத்துகிறது. கர்ப்பப்பைக் கோளாறுகள், மாதவிடாய் பிரச்னைக்கு இதன் பொடியைத் தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

திரிபலாசூரணம், கருஞ்சீரகப்பொடி, மஞ்சள்தூள், வெந்தயம் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. பற்களின் வலிமைக்கு உதவுகிறது. ஆயுர்வேதத்தில் அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு துணைபுரிந்து, கெட்ட கொழுப்புகளை அகற்றுகிறது. சிறிது கருஞ்சீரக எண்ணெய்யை நெற்றியில் தடவ, தலைவலி குணமாகும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்பிரமணியன்.

Related posts

பூண்டு பாலின் நன்மைகள்

நோயை விரட்டும் கண்டங்கத்தரி

மூளையின் முடிச்சுகள்