விசாரணையில், முன்விரோத தகராறில் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே, கொலைக்கு தூண்டுதலாக இருந்த நெல்லிகுளத்தை சேர்ந்த அய்யாவு என்ற வேல்முருகன், வீரசூரன் ஆகியோரை கைது செய்யக்கோரி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே காளிக்குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென கும்பலில் இருந்தவர்கள் டிஎஸ்பி காயத்ரியின் நெஞ்சில் கை வைத்து தள்ளியும், தலைமுடியை பிடித்து இழுத்தும் தாக்கினர். இதையடுத்து போலீசார், டிஎஸ்பியை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.
* போலீசார் லத்தி இல்லாமல் இருந்தால் உடனே சஸ்பெண்ட்: எஸ்பி அதிரடி
பெண் டிஎஸ்பியை போராட்டக்காரர்கள் தாக்கியதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு சில அறிவுரை வழங்கியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இந்த நொடியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவல்துறையினரும் கையில் லத்தி இல்லாமல் இருக்கக்கூடாது. பாதுகாப்பு பணிக்கு வரும்போது கையில் லத்தி இல்லாமல் யாரையாவது பணியில் பார்த்தால் உடனே சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். பிரச்னை நடைபெறும் இடத்தில் வெறும் கையோடு பேசுவதற்கும், கையில் லத்தியோடு பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக அடிதடி போன்ற இடங்களில் வாயில் பேசிக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது. கையில் லத்தி கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக பீட் போலீஸ், பந்தோஸ்து போலீஸ், பணியில் இருக்கும் எல்லா போலீசும் நான் பார்க்கும்போது கையில் லத்தி இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது. இதுவே முதலும் கடைசியும் ஆக இருக்க வேண்டும். அனைத்து டிஎஸ்பியும் ரோல் காலில் கட்டாயம் லத்தி கொண்டு வருவதற்கு போலீசை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.