Thursday, June 27, 2024
Home » விடுதியில் லேப்டாப்பை சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: நாமக்கல்லில் இருந்து பயிற்சிக்காக சென்னை வந்தபோது பரிதாபம்

விடுதியில் லேப்டாப்பை சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பெண் டாக்டர் பலி: நாமக்கல்லில் இருந்து பயிற்சிக்காக சென்னை வந்தபோது பரிதாபம்

by Francis

சென்னை: பயிற்சிக்காக சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த பெண் மருத்துவர், லேப்டாப்புக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரனிதா (32). இவர் மருத்துவம் படித்துவிட்டு மேல் படிப்புக்காக சென்னை, அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு உதயகுமார் என்ற கணவரும், 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். உதயகுமார் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சரனிதா எம்டி மருத்துவ படிப்பை முடித்து 25 நாட்கள் பயிற்சிக்காக அயனாவரம்-குன்னூர் ஹைரோடு பகுதியில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்தார். அவ்வப்போது கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சிக்காக சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் காலை உணவு சாப்பிட்டு விட்டு சரனிதா தனது அறைக்குச் சென்றார். அதன் பிறகு அவரது கணவர் உதயகுமார் பலமுறை போன் செய்தும் சரனிதா போனை எடுக்கவில்லை. இதனால் உதயகுமார் தங்கும் விடுதியில் உள்ள அலுவலகத்திற்கு போன் செய்து தனது மனைவியை தொடர்பு கொள்ளுமாறு
கூறியுள்ளார்.

இதனையடுத்து மதியம் சுமார் 2 மணியளவில் தங்கும் விடுதியில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்யும் கமலா என்பவர், மேலே சென்று பார்த்தபோது சரனிதா வாயில் ரத்தத்துடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக தங்கும் விடுதியைச் சேர்ந்தவர்கள் அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது, சரனிதா மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உறவினரான நடராஜன் என்பவரை வரவழைத்து அதன் பின்பு உயிரிழந்த சரனிதா உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சரனிதாவின் கையில் மின்சாரம் பாய்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. அவர் லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது சார்ஜ் வயர் லேசாக அறுந்துள்ளது. அதில் மின்சாரம் பாய்ந்து சரனிதா உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் சில நாட்களில் பயிற்சி முடிந்து தனது சொந்த ஊருக்கு திரும்ப இருந்த நிலையில், பெண் மருத்துவர் தங்கும் விடுதியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

You may also like

Leave a Comment

17 − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi