மும்பை: விமானத்தில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேராசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் இருந்து கடந்த புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மும்பைக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 24 வயதான பெண் டாக்டர் ஒருவர் பயணம் செய்தார். அவருக்கு அருகே உள்ள இருக்கையில் 47 வயதான கல்லூரி பேராசிரியர் ஒருவர் அமர்ந்திருந்தார். விமான பயணத்தின்போது இளம் டாக்டரை பேராசிரியர் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இளம்பெண் விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். விமானம் மும்பையில் தரையிறங்கியதும் பெண் டாக்டர் சாகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பேராசிரியரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.