திருவொற்றியூர்: பெண்ணை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவொற்றியூர் காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தன்னை பலாத்காரம் செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கார்த்திக் முனுசாமி, கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் கோரி இவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் தன்னுடைய குடும்பத்தினருடன் வந்து பெண் புகார் அளித்துள்ளார் என கார்த்திக் முனுசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வாரம் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கார்த்திக் முனுசாமிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.