இதை ஏற்ற உயர் நீதிமன்றம் தெலங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியது. தெலங்கானா மாநிலத்துக்கு வழக்கை மாற்றியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐ.ஜி.முருகன் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டை ஏற்று தமிழ்நாட்டிலேயே வழக்கை நடத்த உச்ச நீதிமன்றம் 2021ல் அனுமதி அளித்தது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண் அதிகாரி, 3 போலீஸ் அதிகாரிகள், டிரைவர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஆனால், இறுதி அறிக்கை எதையும் தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர் ஐ.ஜி முருகன், ஐபிஎஸ் அதிகாரி என்பதால் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்குமாறு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதினர். இதையடுத்து, முருகன் மீது அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க ஆளுநர் அலுவலகமும், தமிழ்நாடு அரசும் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஐ.ஜி முருகன் மீது பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் டிரைவர்கள் உள்பட 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. அவர்களின் வாக்குமூலங்கள் உள்பட ஆவணங்களுடன் 112 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.