ஊட்டி : ஊட்டி – கல்லட்டி மலைப்பாதையில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தலைகுந்தாவில் இருந்து மசினகுடி வரை கல்லட்டி மலைப்பாதை உள்ளது. இச்சாலையானது அபாயகரமான மற்றும் குறுகிய வளைவுகளை கொண்ட சாலையாக விளங்கி வருகிறது. இதனால் வெளியூர் மற்றும் வெளிமாநில வாகனங்கள் மசினகுடியில் இருந்து மேல்நோக்கி வர மட்டும் அனுமதிக்கிறது.
உள்ளூர் வாகனங்கள் மட்டும் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் 19வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு மணி நேரமாக மரம் அப்புறப்படுத்தாமல் இருந்ததால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.