நள்ளிரவில் வீடு புகுந்து தந்தையை கொன்று மகளை கடத்திய வாலிபர்: சில்மிஷ தகராறில் போக்சோவில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெறிச்செயல்

தேன்கனிக்கோட்டை: தந்தையை அடித்துக் கொலை செய்து விட்டு, மகளை கடத்திச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே ஜெ.காருப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ்(47), கூலி தொழிலாளி. இவரது 17 வயது மகளை அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடராஜ்(25) காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 23.10.23 அன்று கெலமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு சென்றுவிட்டு மாணவி வீடு திரும்பும் போது வெங்கடராஜ் வழிமறித்து தகராறு செய்து முத்தமிட்டுள்ளார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் போலீசார் வெங்கடராஜ் மீது போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெங்கடராஜ் ஜாமீனில் வந்துள்ளார். அதன்பின்பும் மாணவியை அவர் காதலிப்பதாக கூறியதோடு, அவரை திருமணம் செய்துகொண்டால் போக்சோ வழக்கு முடிந்துவிடும் என நம்பினார். மாணவி தற்போது பிளஸ்2 முடித்து வீட்டில் இருந்துவருகிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் வெங்கடராஜ், நண்பர் உபேந்திரனுடன் (24) முனிராஜின் வீட்டுக்கு சென்று அவரை எழுப்பி மகளை தனக்கு திருமணம் செய்து தரும்படியும் வழக்கை வாபஸ்பெறும்படியும் கூறியுள்ளார். மேலும் மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளார். முனிராஜ் தடுக்கவே இரும்பு ராடு மற்றும் கட்டையால் அவரை தலையில் பலமாக தாக்கியுள்ளார். அதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். பின்னர் வெங்கடராஜ் சிறுமியை கடத்திச்சென்று விட்டார். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து உபேந்திரனை கைது செய்தனர். தலைமறைவான வெங்கட்ராஜையும் மாணவியையும் தேடி வருகின்றனர்.

Related posts

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

செப்.20ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்