பெரம்பூர்: செல்போனில் பேசக்கூடாது என்று மருமகளை கண்டித்த காரணத்தால் மாமனாருக்கு சரமாரியாக பீர்பாட்டில் குத்து விழுந்தது. சென்னை ஹார்பர் வெங்கடேச லிங்கி செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜி (47). இவர் பிராட்வேயில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியில் உள்ள மகன் புஷ்பராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது புஷ்பராஜின் மனைவி அனிதா, யாருடனோ நீண்ட நேரமாக செல்போனில் பேசியுள்ளார். இதனால் ராஜி, ‘’யாரிடம் இவ்வளவு நேரம் செல்போனில் பேசுகிறாய்’’ என்று கேட்டு மருமகளை எச்சரித்துள்ளார்.
அந்த சமயத்தில் அனிதாவின் தம்பி மாதவன் வந்து ராஜியிடம் கடும் வாக்குவாதம் செய்ததுடன், ‘’எனது அக்காவை தட்டிக் கேட்பதற்கு நீ யார்’’ என்று கூறி அங்கு கிடந்த பீர்பாட்டிலை எடுத்து உடைத்து ராஜியின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார். இதில் அவருக்கு வலது பக்க காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து 6 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.