Saturday, October 5, 2024
Home » பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்: கேரள முதல்வர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்: கேரள முதல்வர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

by Ranjith

சென்னை: ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இருந்து பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம் என்று கேரள முதல்வர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், டெல்லி, ஐந்தர்மந்தரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆற்றிய உரை:

கேரளத்துல இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுறேன். நேற்று முன்தினம் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தி இருக்கிறார். இன்று (நேற்று) திமுகவை சேர்ந்த எம்பிக்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதி பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு காரணமான ஒன்றிய பாஜ அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞரிடம் ஒரு கருத்தை சொன்னார். “தமிழ்நாட்டின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வரத் தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழ்நாட்டில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றி தருவேன்” என்று சொன்னார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி – மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார். மாநிலங்கள் இருப்பதோ – மாநிலங்களுக்கு முதல்வர்கள் இருப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை.

இத்தனைக்கும் குஜராத் மாநில முதல்வராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர். ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையை பறித்ததுதான். மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்கு சமம். அதைத்தான் பாஜ அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பாஜ முதல்வர்கள் நினைக்க வேண்டாம். நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

பாஜ அரசின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதல்வர் காம்ரேட் பினராயி விஜயனும் போராடி வருகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு மாபெரும் நிதி நெருக்கடி பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம். அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய ஒன்றிய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சி பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள்.

மாநிலங்களுடைய பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான். மாநில அரசிடம் தான் எல்லா அன்றாட தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பாஜ அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசை கைப்பற்றி, பாசிச பாஜவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம். காம்ரேட் பினராயி விஜயனுக்கும், கேரள அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi