புதுடெல்லி: விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழம் மற்றும் காய்கறிகளில், அவர்களுக்கு சந்தை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கான காரணங்களை மதிப்பிடும் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையின்படி, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழம் மற்றும் காய்கறிகளில் அவர்களுக்கு சந்தை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது. தக்காளி விவசாயிகளுக்கு சந்தை விலையில் 33 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. வெங்காய விவசாயிகளுக்கு சந்தை விலையில் 36 சதவீதமும், உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு 37 சதவீதமும் கிடைக்கிறது.
வாழை விவசாயிகளுக்கு சந்தை விலையில் 30.8 சதவீதமும், திராட்சை விவசாயிகளுக்கு 35 சதவீதமும், மா விவசாயிகளுக்கு 43 சதவீதமும் கிடைக்கிறது. பால் பண்ணையாளர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களின் விலையில் 70 சதவீதம் வரை பெறுகின்றனர். முட்டை உற்பத்தியாளர்களுக்கு சந்தை விலையில் 75 சதவீதமும், கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு சந்தை விலையில் 56 சதவீதமும் கிடைக்கிறது. மழை, வறட்சி, பருவநிலை போன்ற பல்வேறு காரணங்களால் பழங்கள், காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், அதிக விலை உயர்வின் பலன் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அதிக குளிர்பதன அமைப்புகள், சூரிய ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் போன்றவற்றை உருவாக்க வேண்டும்’ என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.