கூடலூர்: தேனி மாவட்ட தமிழக எல்லை, கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட தமிழக வனப்பகுதியான ஆசாரிபள்ளம் பகுதியில் கூடலூர் பகுதியை சேர்ந்த சிலர் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வந்துள்ளனர். கடந்த 1993ல் வனப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது இங்கு விவசாயம் செய்த ஏராளமான விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர். இதில் சிலர் நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 18 குடும்பங்களுக்கு சாதகமாக உத்தரவு வந்துள்ளதாக கூறி, தங்கள் நிலத்தை ஒப்படைக்க கோரி பெண்கள் உட்பட 20 பேர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் டென்ட் அமைத்து குடியேறினர்.
வனத்துறையினர் அவர்களிடம் நேற்று முன்தினம் 2வது நாளாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், கொட்டும் மழையிலும் விவசாயிகள் நேற்று 3வது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘இந்த நிலத்திற்கு 1987 வரை வரி கட்டி உள்ளோம். பின்பு அங்கு நடந்த ஒரு கொலை வழக்கில் 129 பேர் கைது செய்யப்பட்டோம். அப்போதுதான் வரிவாங்குவது நிறுத்தப்பட்டது. 14 வருடங்களுக்குப்பின் அந்த வழக்கில் நாங்கள் நிரபராதி என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஏற்கனவே நிலம் சம்மந்மதாக வழக்கு தொடுத்து தீர்ப்பு பெற்ற 11 பேருக்கு ஆசாரிபள்ளம் 4ம் மைல் பகுதியில் இடம் கொடுத்துள்ளனர். எங்களுக்கு தர மறுக்கின்றனர்’’ என்றனர்.