ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் சூளைமேனி கிராமத்தில் உள்ள விவசாயிகள் பெரும்பாலானவர்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் பயிரிட்டுள்ளனர். இவர்கள் அறுவடை காலத்தில் அறுவடை செய்த நெல்லை சூளைமேனி-தேர்வாய் சிப்காட் சாலையில் கொட்டி உலர்த்தி பின்னர் மூட்டைகளில் கட்டி அதை செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்கின்றனர்.
விவசாயிகள் அவ்வாறு சாலையில் நெல்லை கொட்டி காயவைப்பதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்வாய் சிப்காட்டிற்கு செல்லும் கனரக வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகளின் வசதிக்காக அரசு நெல் களம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.