பூதப்பாண்டி அருகே வயல், தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய யானை கூட்டம்: விவசாயிகள் கவலை

பூதப்பாண்டி: பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதிகள் நிறைந்த கிராமங்கள் அதிள அளவில் உள்ளன. தொடர்ந்து வனப்பகுதிகளில் இருந்து உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் நுழையும் யானை, காட்டுப்பன்றி கூட்டம் விளை நிலங்களை சேதப்படுத்திவிட்டு செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றன. பூதப்பாண்டி அருகே திடலை அடுத்த கடம்படி வளாகம் என்ற வனப்பகுதி கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் தங்களது வயல்களில் நெல், தோட்டங்களில் வாழை, தென்னைகளை பயிரிட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் கடம்படி வளாகம் கிராமத்துக்குள் நுழைந்துள்ளன. பின்னர் அங்குள்ள தோவாளை சானலுக்கு கீழ் பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்த யானைகள் வாழைகளை தின்றும், தென்னை மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளன. இதுவரை நெல் வயலில் புகுந்து யானைகள் சேதப்படுத்தியது இல்லை.

ஆனால் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள வயலில் புகுந்த யானை கூட்டங்கள் நெற்பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன. இதையடுத்து இன்று காலை தோட்டம் மற்றும் வயலுக்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் கடம்படி வளாகம் கிராமத்துக்கு சென்று சேத விவரங்களை பார்வையிட்டு வருகின்றனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் கிராமத்துக்குள் வராதவாறு தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கவலையோடு தெரிவித்தனர். யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அமெரிக்காவில் மீண்டும் கோயில் மீது தாக்குதல்: – இந்துக்களே திரும்பி செல்லுங்கள் என எழுதி வைத்ததால் பரபரப்பு

சியாச்சின் ராணுவ முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு

சீனா சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசர தரையிறக்கம்