தற்போது கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் பருவமழை பெய்து வருகிறது. எனவே, காய்கறிகள் விவசாயத்தில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை நிலையாக இல்லாமல் இருப்பதாலும், போதிய விலை கிடைக்காததாலும், இங்கிலீஷ் காய்கறிகளுக்கு தற்போது கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருவதாலும் கூக்கல்தொரை சுற்று வட்டார பகுதி விவசாயிகள் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில்,‘‘இங்கிலீஷ் காய்கறிகளை விளைவிப்பதற்கு தனியார் நிறுவனங்கள், விதை, நாற்றுகள், இடுபொருட்கள் மற்றும் மருந்துகள் அனைத்தையும் கொடுத்து விவசாயம் செய்ய ஊக்குவிக்கின்றனர். மேலும் நிலையான கொள்முதல் விலையை நிர்ணயித்து அதற்கு ஏற்றார் போல அவர்களே விலை நிலங்களுக்கு நேரில் வந்து அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுச் செல்கின்றனர். ஒரு வேளை அந்த வகை காய்கறிகளுக்கு கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்தாலும், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தில் மூன்றில் ஒரு பங்கு நஷ்டம் ஏற்பட்ட தொகையை அவர்கள் வழங்கி விடுகின்றனர்.
மேலும் இவ்வகை காய்கறிகளுக்கு சந்தையில் நல்ல கொள்முதல் விலை கிடைப்பதுடன், குறுகிய கால பயிராகவும் உள்ளது. தற்போது சல்லாரை கொள்முதல் விலை கிலோவுக்கு 160 ஆகவும், புரூக்கோலி கிலோ 220 ரூபாய்க்கும், லீக்ஸ் கிலோ 300 ரூபாய்க்கும், ஐஸ்பெர்க் கிலோவுக்கு 65 ரூபாய்க்கும் தரத்திற்கு ஏற்றவாறு கொள்முதல் செய்யபட்டு வருகிறது. எனவே ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு, அதன் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர்’’ என்றனர்.