தஞ்சாவூர், டிச.31: தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் காவிரி உப வடிநில பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் பாசன வேளாண்மை நவீனபடுத்துதல் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு ஒரு நாள் கண்டுணர்வு சுற்றுலாவிற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது. முதலில் மண்ணியல் துறை இணைப்பேராசிரியர் தனுஷ்கோடி, பாரம்பரிய நெல் வளர்ப்பு பரன்மேல் ஆடு வளர்த்தல், அசோலா வளர்ப்பு, மண்புழு உர உற்பத்தி குறித்து விளக்கியதோடு அவற்றின் மாதிரிகள் கொண்டு செயல்விளக்கம் அளித்தார்.
பின்னர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் பெரியார் ராமசாமி, பாரம்பரிய நெல் ரகங்கள், நெல்வயலில் மீன் வளர்த்தல், கோழி வளர்ப்பு, அங்கக இடுபொருட்கள் தயாரித்தல் மற்றும் வசம்பு நடவுமுறை குறித்து பேசினார்.பின்னர் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா நன்றி கூறினார். இந்த சுற்றுலாவில் 50க்கும் மேற்பட்ட காவிரி உபவடிநில தஞ்சாவூர் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப உதவியாளர் சுதாகர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் அபிநயா ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.