தொண்டாமுத்தூர்: கோவை தொண்டாமுத்தூர் அடுத்துள்ளது நரசீபுரம் பிரிவு. இங்குள்ள கல்லூரி பின்புறம் பெரியசாமி தோட்டம் களத்துக்காடு பகுதி உள்ளது. இப்பகுதிக்கு விராலியூர், இந்திரா காலனியைச் சார்ந்த விவசாயி சின்னக்குட்டி (73) என்பவர் இன்று காலை இயற்கை உபாதைக்காக வந்தார். அப்போது அங்கு வந்த ஒற்றை காட்டு யானை சின்னக்குட்டியை தாக்கியது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது சின்னக்குட்டி இறந்துவிட்டது தெரியவந்தது.
இதையறிந்த ஆலாந்துறை போலீசார் சம்பவயிடம் வந்து சின்னக்குட்டி சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க கோரி கிராம மக்கள் கடந்த வாரம் சாலை மறியல் செய்தது குறிப்பிடத்தக்கது.