அண்ணாநகர்: சென்னை புளியந்தோப்பு கே.பி.ஹவுசிங்போர்டு பகுதியில் வசித்து வருபவர் வேலழகி (63). பிரபல ரவுடியான இவர், கஞ்சா வியாபாரம் செய்தார். இவர் மீது சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்கு உட்பட சுமார் 56 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து புளியந்தோப்பு பகுதியில் விற்பனை செய்து வந்தார். பல முறை கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வதும் பின்னர் வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையும் செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அண்ணாநகர் மது விலக்கு இன்ஸ்பெக்டர் மனோகருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஞ்சா பொட்டலங்களுடன் வேலழகியை கையும் களவுமாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவார் என்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அண்ணாநகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர், சென்னை ஆணையருக்கு பரிந்துரை செய்தார். அவரது உத்தரவின் பேரில் வேலழகி மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.