குடும்ப தகராறில் காதல் மனைவி, மாமனார், மாமியாரை இரும்புக் கம்பியால் அடித்து கொலை: கணவரை கைது செய்து போலீஸ் விசாரணை

பெங்களூரு: யாதகிரி மாவட்டம் சைதாப்பூர் அருகே மனைவி, மாமனார், மாமியார் ஆகிய மூவரையும் அப்பகுதியில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யாதகிரி மாவட்டம் முனகல் கிராமத்தை சேர்ந்த நவீன் என்ற வாலிபர், தாவணகெரெவை சேர்ந்த அன்னபூர்ணா என்ற பெண்ணை 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். நவீன்-அன்னபூர்ணா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

நவீன் தேவையில்லாமல் சண்டை போடுவதாகக்கூறி அன்னபூர்ணா குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஓராண்டாகியும் நவீனுடன் சேர்ந்து வாழ செல்லவில்லை. இதையடுத்து, கடந்த புதன்கிழமை அன்னபூர்ணாவின் வீட்டிற்கு சென்ற நவீன், மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டார். அன்னபூர்ணாவின் தந்தை நவீனிடம் சில நிபந்தனைகளை விதித்து, அன்னபூர்ணாவை சமாதானம் செய்துவைக்க, இருவரும் சேர்ந்து வாழ ஏற்பாடு நடந்தது. அதன்படி, அன்னபூர்ணாவை அவரது தந்தை பசவராஜப்பா மற்றும் தாய் கவிதா ஆகிய இருவரும் அழைத்து வந்து நவீன் வீட்டில் விட்டனர்.

அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு வருவதாகக்கூறி அன்னபூர்ணாவையும் காரில் அழைத்துச்சென்ற நவீன், மனைவி அன்னபூர்ணா, மாமனார் பசவராஜப்பா மற்றும் மாமியார் கவிதா ஆகிய மூவரையும் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தார். அவர்களது உடலை வடகெரெ தாலுகா ஜோலடடாகி கிராமத்திற்கு வெளியே தூக்கி எறிந்திருக்கிறார். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த சைதாப்பூர் போலீசார், நவீனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்