திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே குடும்ப பிரச்னை தீர நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று இளம்பெண்ணை கட்டாயப்படுத்திய போலி மந்திரவாதி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே தாமரைசேரி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 பேர் வந்தனர். அவர்கள் இளம்பெண்ணிடம், தாங்கள் மந்திரவாதம் செய்பவர்கள் என்றும், உங்களது குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன என்றும் கூறி உள்ளனர். மேலும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்றால் நிர்வாண பூஜை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் மரணம் நிகழும் என்றும் கூறி அச்சத்தை ஏற்படுத்தினர்.
ஆனால் சுதாரித்து கொண்ட இளம்பெண், அதெல்லாம் தேவை இல்லை என்று கூறி 2 பேரையும் அனுப்பி வைத்துவிட்டார். பின்னர் மீண்டும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று நிர்வாண பூஜை நடத்தாவிட்டால் பெரும் அசம்பாவிதம் நடக்கும் என்று கூறி இருவரும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து இளம்பெண், தாமரைசேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், அங்குள்ள அடிவாரம் என்ற பகுதியை சேர்ந்த பிரகாசன் (46) மற்றும் முகம்மது ஷமீர் (34) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் தாமரைசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.