குடும்ப தகராறில் தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

*பாணாவரத்தில் பயங்கரம்

பாணாவரம் : திருவள்ளூரில் குடும்ப தகராறு காரணமாக கோபித்து கொண்டு, பாணாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற மனைவியை, கணவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள பாறைமேட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி குப்பம்மாள். இவர்களது மகள் சந்தியா(22). இதில் முருகன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், அம்மையார்குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணாயிரம் மகன் ஓம்பிரகாஷ்(26), ஆட்டோ டிரைவர். இவருக்கும், சந்தியாவுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது 2 வயதில் பேரரசி என்ற பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சந்தியா கோபித்துக்கொண்டு அம்மையார்குப்பத்தில் இருந்து பாணாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று தங்கினார்.

இதையடுத்து நேற்று காலை மாமியார் வீட்டிற்கு சென்ற ஓம்பிரகாஷ், மனைவி சந்தியாவை வாழ வரும்படி அழைத்துள்ளார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சந்தியா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

தொடர்ந்து 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மாமியார் கும்பம்மாளுக்கு போன் செய்த ஓம்பிரகாஷ், ‘உன் மகளை அறுத்து போட்டுள்ளேன் வந்து வாரிட்டிபோ’ என கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கும்பம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு கதறி அழுதார். மேலும் பாணாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த ஓம்பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குடும்பத் தகராறில் பட்டப்பகலில் மனைவியை, கணவன் கறுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய் இறந்தது அறியாமல் அழுது கொண்டிருந்த குழந்தை

மனைவி சந்தியாவை கழுத்தறுத்து கொன்ற ஓம்பிரகாஷ் மாமியாருக்கு போன் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது தாய் இறந்தது அறியாமல் 2 வயது பெண் குழந்தை சடலத்தை அணைத்தபடி கதறி அழுது கொண்டிருந்துள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து குழந்தையை தூக்கிக்கொண்டனர். பின்னர் வீட்டிற்கு வந்த குப்பம்மாளிடம் ஒப்படைத்தனர். தாய் கொலை செய்யப்பட்ட நிலையில், தந்தையை போலீசார் கைது செய்தனர். இதனால் குழந்தை ஆதரவின்றி அழுவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சிக்கிமில் ராணுவ வாகனம் விபத்து: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு