மற்ற கட்சிகளை உடைக்கும் பாஜகவின் தந்திரத்திற்கு நம்மில் சிலர் இறையாகிவிட்டனர்: சரத்பவார் பேட்டி!

டெல்லி: மற்ற கட்சிகளை உடைக்கும் பாஜகவின் தந்திரத்திற்கு நம்மில் சிலர் இறையாகிவிட்டனர் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் எனவும், உடைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டமைக்க போவதாகவும் சரத்பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் நேற்று தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 29 பேருடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து அக்கட்சியில் இணைந்த அவர், அம்மாநில துணை முதல்வராகவும் பதவியேற்றார். அஜித் பவாருடன் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான யஷ்வந்த்ராவ் சவான் நினைவிடத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் இன்று மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர், அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய சரத் பவார், பாரதிய ஜனதா கட்சி நாட்டில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளையும் அழிக்க நினைப்பதாகவும், அப்படி பாரதிய ஜனதா கட்சியின் சூழ்ச்சியால் உடைந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டமைக்கப் போவதாக உணர்ச்சிவசத்துடன் தெரிவித்துள்ளார். நாட்டை ஆளும் சிலர் ஜாதி, மதத்தின் பெயர்களால் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதாகவும், இன்று கட்சியை உடைத்தவர்கள் அவர்கள் இருக்க வேண்டிய உண்மையான இடம் என்ன என்பதை காலம் நிச்சயம் உணர்த்தும் என எச்சரித்துள்ளார்.

Related posts

ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது..! ஈஷா காய்கறி திருவிழாவில் திமுக எம்.பி பேச்சு!

மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மெல்ல மெல்ல சீரடைகிறது