100 கூட தேறாது…தோல்வி பயத்தால் மோடிக்கு தூக்கம் போச்சு…கே.பாலகிருஷ்ணன்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் நமது கூட்டணி அமைந்துள்ளது. 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெறுவது நிச்சயம். அதே நேரத்தில் எதிர் அணியில் இருப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள். 200 இடங்களில் கூட பாஜ வெற்றி பெறாது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் 100 இடங்களை கூட வெல்ல முடியாது என்பது தான் உண்மை. மோடிக்கு எதிராக அலை வீசுகிறது என ஒன்றிய உளவுத்துறை ரகசிய அறிக்கை தந்துள்ளது. இதனால் மோடி தூக்கம் தொலைந்து அலைகிறார். ஒரு மாநில முதலமைச்சரை மோடி அரசு கைது செய்கிறது. கேட்டால் அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுத்தது என்கிறார்கள். ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் யார், யார் சிறைக்கு செல்ல போகிறார்கள் என்பதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது. எடப்பாடி பழனிசாமி, மோடியை உண்மையிலேயே எதிர்க்கிறாரா? சந்தேகமாக இருக்கிறது. மோடி மீண்டும் பிரதமரானால் எடப்பாடி அவருடன் சேர மாட்டாரா? மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழிலில் கூட அதானி, அம்பானி வர வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கூறினார்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது