திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் 11 நாட்கள் பாவமன்னிப்பு விரதம் மேற்கொண்டார். இந்த விரதத்தை நிறைவு செய்யும் விதமாக நேற்றுமுன்தினம் திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து சென்றார். பின்னர் நேற்று காலை தனது மகள்களான பாலினா அஞ்சனி, அதியா புனிதலாவுடன் துணை முதல்வர் பவன்கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக துணை முதல்வர் பவன்கல்யாணின் இளைய மகள் கொனிடேலா பாலினா அஞ்சனி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேவஸ்தான அதிகாரிகள் கொண்டு வந்த ‘உறுதிமொழி நம்பிக்கை’ பத்திரத்தில் கையெழுத்திட்டார். அதில், ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை இருப்பதாக கூறி கையெழுத்திட்டார். மகள் பாலினா அஞ்சனி மைனர் என்பதால், அவரது தந்தையான பவன் கல்யாணும் அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டார்.