மிரட்டி பணம் பறித்த வழக்கு நிர்மலா சீதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

பெங்களூரு: தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, பாஜ முன்னாள் மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், பாஜ மாநில தலைவர் விஜயேந்திரா, அமலாக்கத்துறை, பாஜ அலுவலக பணியாளர்கள் ஆகியோர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி திலக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய கர்நாடக அமைச்சர் பிரியாங்க் கார்கே, ‘பாஜ தார்மீக அடிப்படையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகனும் பாஜ மாநில தலைவருமான விஜயேந்திரா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். நிர்மலா சீதாராமன், ஆர்.அசோக், முனிரத்னா ஆகியோரையும் வெளியேற்ற வேண்டும். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

ரூ.1 லட்சம் கோடி நஷ்டத்தில் இயங்கும் 33 நிறுவனங்கள் ரூ.576.2 கோடி பாஜவிற்கு நன்கொடை அளித்துள்ளன. நிகர லாபம் ரூ.646 கோடி என காட்டிய 6 நிறுவனங்கள், நிகர லாபத்தை விட அதிகமான தொகையை பாஜவிற்கு நன்கொடை அளித்துள்ளன. இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்றார். இதே கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Related posts

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

ஏமனுக்கு இஸ்ரேல் பதிலடி

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்