திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் அண்ணாமலைக்கு சவால் விட்டு அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜவிற்கும், அதிமுகவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் இருதரப்பும் மாறி மாறி சவால் விட்டு வருகின்றனர். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை அதிமுக அணைய போகிற விளக்கு. ஜூன் 4ம் தேதிக்கு பின் அதிமுக அணைந்து விடும் என தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் நேற்று அதிமுகவினர் அண்ணாமலைக்கு சவால் விடும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், ‘‘ஜூன் 4க்கு பிறகு அணையப்போகிற விளக்கு யாரு, எரிய போகிற விளக்கு யாருனு தெரியவரும். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் ஆடும் அண்ணாமலையே… ஜூன் 4 வரை காத்திரு, நாங்களும் காத்திருக்கோம். உன் ஆணவத்தை அடக்க அண்ணாமலையே’’ என வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
மற்றொரு போஸ்டரில், ‘‘அதிகாரத்தை பயன்படுத்தி வளரும் கட்சியான பாஜ பவர் போனதும் அணைந்து விடும். ஆலமரம் போன்ற அதிமுக கோடான கோடி தொண்டர்கள் விழுதுகளாக தாங்கி பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது, நாவை அடக்கு அண்ணாமலையே, இல்லை என்றால் அடக்குவோம் என சிவகங்கை மாவட்ட மாணவரணி பொருளாளர் மணிமாறன் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.