திருபுவனை : புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் காந்தி சிலை நிறுவப்பட்டது. பூங்காவை சுற்றிலும் வண்ண மலர் செடிகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு சறுக்கு மரம், ஊஞ்சல் உருவாக்கப்பட்டது. வயதானவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் அமர்ந்து, பொழுது போக்கி வந்தனர். காலப்போக்கில் சரிவர பராமரிப்பு இல்லாததால், இந்த பூங்கா வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. மேலும், குடிகாரர்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகளின் அடைக்கலமாகவும் பூங்கா இருந்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், தொகுதி எம்எல்ஏவிடம் தெரிவித்தும், அதனை கண்டுகொள்ளவில்லை. எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. எனவே புதுச்சேரி அரசு, காந்தி பூங்காவை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.