சோழிங்கநல்லூர்: வட மாநிலத்திலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்கும் விதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடை 5ல் வந்த மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பிறகு பேரை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொந்தர்ம்பா ஸ்வைன் (60), போத்தோலபோ சாஹூ (30) என்றதும் இவர் மீது ஒடிசா மாநிலத்தில் இரண்டு கஞ்சா வழக்குகள் உள்ளது என்று தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமிருந்து 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு பூக்கடை போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.