சென்னை: சென்னையைச் சேர்ந்தவர்கள் பிரேம்- மாலா. இவர்களுக்கு திருமணமாகி 4 வயதில் மகள் உள்ளார். தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அப்போது, மாதம் முதல் மற்றும் 3ம் சனிக்கிழமைகளில் பிரேம் தனது மகளை பார்க்கலாம் என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. ஆனால், மகளை பார்க்க மாலா அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேம் சார்பில் ஆஜரான வக்கீல் டி.பிரசன்னா, குழந்தைக்கு ஜூன் 25ம் தேதி பிறந்தநாள்.
அப்போது மகளை பார்க்கவும், பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் பிரேமுக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அந்த 4 வயது மகள் பிறந்தநாளை குடும்பநல நீதிமன்ற கட்டிடத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் வைத்து கொண்டாடலாம். பின்னர், அதுகுறித்து 26ம் தேதி (இன்று) அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோருடன் தனது 4 வயது மகளுக்கு கேக் வெட்டி பிறந்தநாளை பிரேம் கொண்டாடினார்.