Sunday, June 30, 2024
Home » சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன்: ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன்: ஆட்டநாயகன் சுப்மன் கில் பேட்டி

by Mahaprabhu

பெங்களூரு: 16வது சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடந்த 70வது மற்றும் கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதின. டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோஹ்லி நாட்அவுட்டாக 101 ரன் (61 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), டூபிளசிஸ் 28 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய குஜராத் அணியில், விருத்திமான் சாகா 12 ரன்னில் வெளியேற அடுத்துவந்த விஜய்சங்கர் 53 ரன் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார். தசுன் ஷனகா 0, டேவிட் மில்லர் 6 ரன்னில் நடையை கட்ட அதிரடியாக ஆடிய சுப்மன் கில் நாட் அவுட்டாக 52 பந்தில், 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 104 ரன் விளாசினார். 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன் எடுத்த குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

10வது வெற்றியுடன் முதல் இடத்தை தக்க வைத்து கம்பீரமாக பிளேஆப் சுற்றுக்குள் குஜராத் நுழைந்தது. 7வது தோல்வியை சந்தித்த பெங்களூரு 6வது இடத்துடன் வெளியேறியது. சுப்மன்கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், ”நாங்கள் வெற்றியை தொடரவும், உச்சத்தில் முடிக்கவும் விரும்பினோம். சுப்மன் கில் சிறப்பாக ஆடினார். அவரது ஷாட்கள் ஒவ்வொன்றும் அற்புதமானது. அவரது பேட்டிங் மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது. நாங்கள் நன்றாக பந்துவீசவில்லை. விராட் ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆடினார். இந்த ஆண்டு எங்களுக்கு வித்தியாசமான சவாலாக இருந்தது. இளம்வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர், என்றார். ஆட்டநாயகன் சுப்மன்கில் கூறியதாவது: “நான் சிறந்த ஃபார்மில் இருப்பதாக உணர்கிறேன். இந்த சீசனின் முதல் பாதியில் எனக்கு கிடைத்த நல்ல துவக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் இருந்தது. 40-50 ரன்களில் அவுட்டாகி வந்தேன். 2ம் பாதியில் கிடைத்த நல்ல துவக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற முடிவது மகிழ்ச்சியை கொடுக்கிறது. டி20ஐ பொறுத்தவரை தொடர்ந்து ஷாட் விளையாடிக்கொண்டே இருக்கவேண்டும்.

அதற்காக முனைப்புடன் இருக்க வேண்டும், மேலும் உங்களது டெக்னிக்கை பயன்படுத்தி நம்பிக்கையுடன் அணுக வேண்டும். இன்று புதிய பந்து சற்று நின்று வந்தது. அதற்கேற்றவாறு நிதானமான அணுகுமுறையை கையாண்டேன். பந்தில் ஈரப்பதம் இருக்கும்போது பேட் செய்ய கடினமாக இருந்தது. விஜய்சங்கர் சிறப்பாக ஆடினார. என்னுடைய பேட்டிங் அணுகுமுறை பற்றி எனக்கு நன்றாக தெரியும். மேலும் எந்தெந்த பக்கங்களில் என்னால் அடிக்க முடியும் என்றும் தெரியும். சிஎஸ்கேவை சென்னை மைதானத்தில் எதிர்கொள்வதற்கு ஆவலாக இருக்கிறேன். எங்களது அணியில் சிறந்த பவுலிங் அட்டாக் சென்னை மைதானத்திற்கு ஏற்றவாறு இருக்கிறது. அவர்களை வீழ்த்தி 2வது முறையாக பைனலுக்கு செல்வேன் என்று நம்புகிறேன்” என கூறினார்.

You may also like

Leave a Comment

18 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi