வாலிபரை கொன்று சமைத்து சாப்பிட்ட ஓரின சேர்க்கை கொலையாளி வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள்: பரபரப்பு தகவல்கள்

கும்பகோணம்: தஞ்சை அருகே கைதான ஓரினச் சேர்க்கை கொலையாளி வீட்டின் முன்னும் பின்னும் தோண்டத் தோண்ட எலும்புகள் கிடைத்துள்ளன. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழபுரம் கீழத்தெருவை சேர்ந்தவர் கேசவமூர்த்தி(47). போலி சித்த மருத்துவரான இவர், கடந்த 13ம் தேதி தன்னிடம் மருத்துவம் பார்க்க வந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அசோக்ராஜ்(27) என்பவருக்கு போதை மருந்து கொடுத்து ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தி கொலை செய்து உடலை வீட்டின் பின்புறம் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து கேசவமூர்த்தியை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அசோக்ராஜை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி நுரையீரல், கல்லீரலை வீட்டிலேயே மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டுள்ளார்.

மேலும், 2021 நவம்பர் 27ம் தேதி மாயமான அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது அனஸ்(26) என்பவரையும் கொலை செய்து உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் கொல்லைபுறத்தில் புதைத்தும், குறிப்பிட்ட பாகங்களை சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இதுவரை முகமது அனஸ் உடலை போலீசார் மீட்காத நிலையில் கேசவமூர்த்தி இதேபோல் பலரை கொலை செய்திருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேதிக்கின்றனர்.
இந்நிலையில் சோழபுரத்தில் உள்ள கேசவமூர்த்தி வீட்டில் கைரேகை நிபுணர் ஏடிஎஸ்பி ஹேமா மற்றும் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ராமச்சந்திரன் முன்னிலையில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார், மோப்ப நாய் உதவியுடன் நேற்று காலை 11 மணி முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பொக்லைன் உதவியுடன் வீட்டின் கொல்லைபுறத்தில் இருந்த மரங்கள், வீட்டின் முன் பகுதியில் உள்ள மூலிகைச்செடி, வாழை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. தொடர்ந்து 2 இடங்களிலும் 3 அடி அளவுக்கு பள்ளம் தோண்டியபோது விரல் அளவில் 30க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன. மேலும் கேசவமூர்த்தி வீட்டுக்குள்ளும் போலீசார் ஆய்வு செய்தனர். மாலை 4.30 மணி வரை ஐந்தரை மணி நேரம் ஆய்வு நடந்தது. இதைதொடர்ந்து கேசவமூர்த்தி வீட்டில் இருந்த மருந்து, மாத்திரை, மூலிகை பொடிகள், பெண்கள் பயன்படுத்தும் அலங்கார கவரிங் நகைகள், நைட்டி, ஆடைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட எலும்புகளை சேகரித்து 10 அட்டை பெட்டிகளில் தஞ்சை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தஞ்சை தடய அறிவியல் ஆய்வகத்தில் கேசவமூர்த்தி வீட்டில் கிடைத்த எலும்புகள் மனித எலும்புகளா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கேசவமூர்த்தி வீட்டுக்குள்ளும் விரைவில் பள்ளம் ேதாண்டி ஆய்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. கேசவமூர்த்தியின் வீட்டின் பின்புறம் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள் நாயின் எலும்புகள் போல் உள்ளதால் அவர் போதை மூலிகை பொடியை, தான் வளர்த்து வரும் நாய்க்கு பரிசோதனைக்காக கொடுத்து கொன்று புதைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு