புதுடெல்லி: ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது நாடு முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதுதொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும், ஆண்டுதோறும் தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவது போல நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென பல தரப்பிலும் நெருக்கடி தரப்படுகிறது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அறிவுரை ஆலோசனை வழங்க பிரதமர் மோடி ‘பரீட்ஷா பே சர்ச்சா’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2.26 கோடி மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். தற்போது நீட் சர்ச்சையால் இந்த ஆண்டு முதல் பரீட்சா பே சர்ச்சாவை மெய்நிகர் கண்காட்சியாக நடத்த என்சிஇஆர்டி நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக, ஆர்வமுள்ள நிறுவனங்கள் அணுகலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.