சென்னை: உரிமையியல் நீதிபதி மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை விரைந்து வெளியிடுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான போட்டி தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் 1ம் தேதி அறிவித்தது. மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பதவியில் 245 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி நடந்தது. இத்தேர்வை 12,037 பேர் எழுதினர். அதன் ரிசல்ட் கடந்த அக்டோபர் 11ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2,544 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தொடர்ந்து உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான மெயின் தேர்வு கடந்த நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 2,500 பங்கேற்றனர். டி.என்.பி.எஸ்.சி வெளியிட்ட தோராய அறிவிப்பில் மெயின்தேர்வு நடத்தப்பட்ட நாளிலிருந்து 32 நாட்களுக்குள் அதன் முடிவுகள் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. ஆனால் மெயின் தேர்வு நடைபெற்று 50 நாட்களுக்கும் மேலாகியும் ரிசல்ட் வெளியிடப்படவில்லை. இதனால் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற சட்டப்படிப்பு முடித்தவர்களும், உரிய முறையில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளவர்களும் உரிமையியல் நீதிபதிகள் பதவிக்கான மெயின் தேர்வு முடிவை விரைந்து வெளியிடுமாறு டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.