சென்னை: தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை கிளையில்தான் மனு தாக்கல் செய்ய முடியும் என்று முன்னாள் டிஜிபி நட்ராஜுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பற்றியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நட்ராஜ் சார்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பாக மதுரை கிளையில் தான் மனு தாக்கல் செய்ய முடியும். மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.