மோடி வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜ பூஜ்ஜியம்தான்: எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பயன்படுத்த வெக்கமாயில்ல…: ஜெயக்குமார் சுளீர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: புதுச்சேரியில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜவினர் வைத்துள்ளது தொடர்பாக, புதுச்சேரி அதிமுக பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜ பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி, பாஜ வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது.

தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என தெரிகிறது. கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா?. எம்ஜிஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தம். தமிழ்நாட்டில் பாஜவுக்கு எந்தவொரு ஆதரவும் இல்லை. பிரதமர் மோடி தமிழகம் வருவதால் ஒன்னும் நடக்காது. திருச்சி மாநாட்டில் காலி சேர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜ பூஜ்ஜியம் தான். அதிமுகவை யாராலும் உருட்டவோ மிரட்டவோ முடியாது. மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி. களத்தில் இல்லாத பாஜ என்ற கட்சியை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அதிமுக கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்போம். வராவிட்டால் கவலை இல்லை. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றார்.

Related posts

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு