யூரோ கோப்பை 2வது அரையிறுதியில் நெதர்லாந்துடன் இங்கிலாந்து மோதல்

டார்ட்மண்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் நெதர்லாந்து – இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்த தொடரில், டார்ட்மண்ட் நகரில் இன்று நள்ளிரவு நடைபெற உள்ள 2வது அரையிறுதியில் நெர்தலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றின் டி பிரிவில் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து தலா ஒரு வெற்றி, தோல்வி, டிரா பெற்றதால் 3வது இடம் கிடைத்தது. எனினும் கோல் வித்தியாச அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு அதிசயமாக முன்னேறியது. அந்த அணியின் கேப்டன் விர்ஜில் வான் டிஜிக், பயிற்சியாளர் ரெனால்டு கோமேன் முயற்சியில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு வந்து நிற்கிறது.

அதுவும் வலுவான அணியான இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. லீக் சுற்று முதல் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் கேப்டன் ஹாரி கேன், பயிற்சியாளர் கெரத் சவுத்கேட் ஆகியோர் அரையிறுதிக்கு இங்கிலாந்தை கொண்டு வந்துள்ளனர். அதே சமயம் சுவிட்சர்லாந்துக்கு எதிரான காலிறுதியில் இங்கிலாந்து ‘பெனால்டி ஷூட் அவுட்’ வரை சென்றுதான் முடிவை எட்டியது. ஆனால் நெதர்லாந்து ஆட்ட நேரத்திலேயே துருக்கியை வீழ்த்தியது. இரு அணிகளும் மோதிய 22 சர்வதேச ஆட்டங்களில் நெதர்லாந்து 7 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 6 ஆட்டங்களிலும் வென்றுள்ளன (9 டிரா). அதுமட்டுமின்றி யூரோ கோப்பையில் 2 முறை மோதியதில் 1-1 என சமநிலை வகிக்கின்றன. யூரோ கோப்பையில் இன்று 3வது முறையாக மோதும் இந்த அணிகளில் யார் வெற்றிக் கணக்கை அதிகரிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

* 1988ல் யூரோ கோப்பையை வென்ற நெதர்லாந்து, அதன் பிறகு பைனலுக்கு கூட முன்னேறியதில்லை. இதுவரை கோப்பையை வெல்லாத இங்கிலாந்து, ஒரே ஒரு முறை (2020) பைனலில் விளையாடி உள்ளது. ஆனால் கோப்பையை வென்றதில்லை.
* நெதர்லாந்து 6வது முறையாகவும், இங்கிலாந்து 3வது முறையாகவும் யூரோ கோப்பை அரையிறுதியில் களமிறங்குகின்றன. நடப்பு சாம்பியன் இத்தாலி நாக் அவுட் சுற்றுடன் நடையை கட்ட, அதனிடம் கடந்த முறை பைனலில் தோற்ற இங்கிலாந்து, இப்போது மீண்டும் அரையிறுதியில் களம் காண காத்திருக்கிறது.

Related posts

கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி வனக் காவலர் காயம்

சென்னை பள்ளிக்கரணையில்உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

வில்லிவாக்கத்திற்கு பதிலாக 4வது ரயில் முனையம் பெரம்பூரில் அமைக்கப்படும்: தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்