Sunday, September 29, 2024
Home » எத்தியோப்பியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.12 கோடி கோகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த நைஜீரிய வாலிபர் கைது

எத்தியோப்பியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.12 கோடி கோகைன் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த நைஜீரிய வாலிபர் கைது

by Suresh

மீனம்பாக்கம்: எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.12 கோடி மதிப்பிலான 1.20 கிலோ கோகைன் போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த நைஜீரிய வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானத்தில் பெருமளவிலான போதைபொருள் கடத்தி வரப்படுவதாக நேற்று முன்தினம் இரவு விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, நள்ளிரவு முதல் அனைத்து வெளிநாட்டு விமானங்களில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறையின் தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து, சோதனை செய்து அனுப்பினர்.

இந்நிலையில், நேற்று அடிஸ்அபாபாவில் இருந்து சென்னை சர்வதேச விமான முனையத்தில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையின் தனிப்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நைஜீரியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த 28 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர்மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தபோது, இந்தியாவில் ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்க வந்ததாகவும், மருத்துவ பரிசோதனைக்கு வந்ததாகவும் என முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். சந்தேகம் எழுந்ததால் அவரை தனியறைக்கு கொண்டு சென்று முழுமையாக பரிசோதித்தனர். உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சலில் 77 சிகரெட் வடிவிலான பொருட்கள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, போதைபொருள் என தெரிந்தது.

மொத்தம் ஒரு கிலோ 201 கிராம் போதைபொருள் இருந்தது. அவற்றை ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, அதிக போதை தரக்கூடிய உயர் ரக கோகைன் போதைபொருள் என தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி. அவற்றை சுங்கத்துறையின் தனிப்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து நைஜீரிய வாலிபரை கைது செய்தனர். தீவிர விசாரணையில், அவர் சர்வதேச போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என தெரியவந்தது. அவர் சென்னையில் யார், யாரிடம் கோகைன் போதைபொருட்களை கொடுப்பதற்காக எடுத்து வந்துள்ளார், இதற்குமுன் போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா என பல்வேறு கோணங்களில் நைஜீரிய வாலிபரிடம் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

You may also like

Leave a Comment

5 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi