ஈரோடு: ஈரோட்டில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.50க்கு விற்பனையாகிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தினர் பாதிப்பு அடைந்துள்ளனர். ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தைக்கு தாளவாடி, ஓசூர், தருமபுரி, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து நாள் தோறும் சராசரியாக 7 ஆயிரம் பெட்டிகள் தக்காளி வரத்து இருந்து வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக விளைச்சல் குறைவால் ஆந்திராவில் இருந்து மட்டும் தக்காளி வருகிறது. வரத்து பாதியாக குறைந்து விட்டதால் விலை இரு மடங்கு உயர்ந்து விட்டது. 10 நாட்களுக்கு முன்பு 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.400 முதல் ரூ.500 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று அதே பெட்டி ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கடந்த மாதம் ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.45 முதல் ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. திடீரென்று தக்காளி விலை அதிகரித்திருப்பது ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினரை வெகுவாக பாதித்துள்ளது.