சென்னை: கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு வயது மூப்பு காரணமாக இன்று காலை 8 மணியளவில் கோவை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85. புலவர் செ.இராசு, ஜனவரி 2, 1938ல் ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே வெள்ளமுத்துக்கவுண்டன் வலசு கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் ந.சென்னியப்பன், நல்லம்மாள். மனைவி கவுரி அம்மாள், மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவையொட்டி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கல்வெட்டியல் கலைச்செம்மல் என போற்றப்படும் செ.இராசு காலமானார் என்ற செய்தி அறிந்து மன வருத்தம் அடைந்தேன். முதல்வரால் 2021ல் செ.ராசுவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பரிவு தொகையாக ரூ.15 லட்சம் வழங்கி சிறப்பிக்கப்பட்டவர். வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து செறிவான நடையில் பதிவிடுவது இவரது சிறப்பு. செ.ராசு மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதேபோல் புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் புலவர் செ.ராசு மறைவுக்கு நடிகர் கார்த்தி சிவகுமார் இரங்கல் தெரிவித்திருக்கிறார். தமிழ் சமூகத்திற்கு பெரும் பணியாற்றிய புலவர் செ.ராசு இயற்கை எய்தினார் என்ற செய்தி பெரும் வருத்தமளிக்கிறது என்று நடிகர் கார்த்தி சிவகுமார் தெரிவித்துள்ளார்.