கூடலூர் : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மைய அறக்கட்டளை சார்பில் கூடலூரில் வாழ்க்கை சுற்றுச்சூழலுக்காக என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. தாலுக்கா அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணிை சுங்கம் ரவுண்டனா,தேவர் சாலை சாலை வழியாக தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் முடிவடைந்தது.
பேரணியை கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரன் தலைமை வகித்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.கூடலூர் இன்ஸ்பெக்டர் அருள் முன்னிலை வகித்தார்.கூடலூர் கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட், தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மைய முதல்வர் சாஜி, ஆர்கே அறக்கட்டளை நிர்வாகி விஜயகுமாரி மற்றும் தொழிற்பயிற்சி மைய மாணவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் பேரணியில் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.இதேபோல் ஸ்ரீ மதுரை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சுனில் பழம் தரும் மரக்கன்றுகளை நடவு செய்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சோனி மற்றும் ஊழியர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.மசினகுடியில் வனத்துறை மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுனர் சார்பில் வனச்சரகர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மரவக்கண்டி அணைப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட மூங்கில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.
தொடர்ந்து தெப்பக்காடு பயிற்சி முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியருக்கு கழிவுகளாக வெளியேறும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பொருட்களில் கைவினைப் பொருட்கள் செய்து மீண்டும் பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனவர் சித்தராஜ் வாகன ஓட்டுனர் சார்பில் அச்சுதன், ஆறுமுகம், குரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.