சென்னை: ஐந்து நாட்கள் – தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” – தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சியை வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை (5 நாட்கள்) காலை 10மணி முதல் மாலை 5மணி வரை நடத்த உள்ளது. இப்பயிற்சியில் தொழில் முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் மற்றும் அடிப்படைகள், சந்தைப்படுத்துதல் மற்றும் பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் -ERP Tally, ஜிஎஸ்டி, இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள், ஆகியவை விளக்கப்படும்.
இப் பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்), 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in < http://www.editn.in > என்ற வலைதளத்தை பார்வையிடவும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032 என்ற முகவரியிலும், 7010143022 / 8668102600 ஆகிய தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.