பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி நடப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த 2016 ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், பொது இடங்களில் கண்காணிப்பு குறைபாடுகளை களைந்து, பொது இடங்களில் கூடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென மூத்த நீதிபதியாக இருந்த என்.கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதை ஏற்று அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு, பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தற்போதைய தலைமை நீதிபதி வி.எஸ்.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த ஓராண்டில் 69 சதவீத இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோ, கால் டாக்சி ஆகியவற்றிலும் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்.

இதையடுத்து, தெற்கு ரயில்வே தரப்பில் வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜராகி, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். இவற்றை பதிவு செய்த நீதிபதிகள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறி க்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கும் அவகாசம் வழங்கி விசாரணையை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எத்தனைநாட்ளில் முடிக்கப்படும் என்பதையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related posts

மேட்டூர் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு செப்.27-ம் தேதி முதல் முறைப் பாசனத்தை அமல்படுத்த நீர்வளத்துறை உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு