மோடி 3ம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், இங்கிலாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி தலைவர் கியர் ஸ்டார்மர் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் கியர் ஸ்டார்மரும், மோடியும் நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினர். அப்போது பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டின் செய்தி தொடர்பாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் ஸ்டார்மர் இங்கிலாந்து, இந்தியா நாடுகளிடையே வலுவான மற்றும் ஆழமான உறவை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பிரதமர் மோடியின் தலைமையை கியர் ஸ்டார்மர் பாராட்டினார்.
இந்தியாவுடன் புதிய உத்திசார் கூட்டாண்மையே இங்கிலாந்தின் விருப்பம். கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவு வலுப்படுத்தப்படும். இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இங்கிலாந்த தயாராக உள்ளதாக மோடியிடம் கியர் ஸ்டார்மர் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக பதவியேற்ற ஸ்டார்மர் நேற்று தன் முதல் அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதில் இங்கிலாந்து எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து அமைச்சர்களுடன் அவர் கலந்தாலோசித்தார்.