நிதானமாக ஆடிய உஸ்மான் கவாஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15வது சதத்தை விளாசினார். இங்கிலாந்தில் அவர் அடித்த முதல் சதம் இதுதான். நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 94 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன் எடுத்திருந்தது. கவாஜா 126, அலெக்ஸ் கேரி 52 ரன்னுடன் களத்தில் உள்ளனர். 82 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 3வதுநாள் ஆட்டத்தை ஆஸி. தொடர்கிறது. நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் கவாஜா அளித்த பேட்டி: இங்கிலாந்திலும் என்னால் ரன்களை எடுக்க முடியும் என்று காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உண்மையிலேயே இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஏன் சதம் அடித்தவுடன் பேட்டை வீசினேன் என தெரியவில்லை. நான் இயல்பை விட சற்று உணர்ச்சிவசப்பட்டேன் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து பேட்டிங் செய்த விதம் மிகவும் வேடிக்கையாக இருந்தது. மக்கள் ஏன் அதை விரும்புகிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஓவருக்கு மூன்று ரன் அல்லது ஓவருக்கு 6 ரன் அடித்தாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள். வெற்றி தான் முக்கியம். அதனால்தான் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் அழகாக இருக்கிறது, என்றார்.