இன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் வெளியீடு செங்கல்பட்டு மாணவி முதலிடம்: 65 பேர் 200-க்கு 200 கட்-ஆப்; 22ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது

சென்னை: 2024-25-ம் கல்வியாண்டு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தகுதியுள்ள 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்ணை 65 பேர் எடுத்திருந்தனர். இவர்களில் 58 பேர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழும், 7 பேர் பிற வாரியங்களின் பாடத்திட்டத்தின் கீழும் படித்தவர்கள் ஆவர். தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் செங்கல்பட்டை சேர்ந்த மாணவி தொசிதா லட்சுமி முதலிடம் பிடித்துள்ளார்.

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, வரும் 22ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 2024-25-ம் கல்வியாண்டில் இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட 24 ஆயிரத்து 787 பேர் அதிகம். விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றமும் செய்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் தகுதியுள்ளவர்களாக கருதப்பட்டு, 9 ஆயிரத்து 777 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்டவர்களில் 5 ஆயிரத்து 959 பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ததற்காகவும், 391 பேர் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களாகவும், 1,219 பேர் பிற மாநிலத்தவர்களாகவும், 2 ஆயிரத்து 208 பேர் முறையான சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யாதவர்களாகவும் இருந்தனர். அதன்படி, தகுதியுள்ள 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேருக்கு தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் உடன் இருந்தார். தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 6 மாணவிகளும், 4 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களின் விவரம் வருமாறு: 1.தோசிதா லட்சுமி (செங்கல்பட்டு), 2.நிலஞ்ஜனா (திருநெல்வேலி), 3.கோகுல் (நாமக்கல்), 4.அஸ்விதா (அரியலூர்), 5.சபிக் ரகுமான் (அரியலூர்), 6.சிபன் ஆஷி (கோவை), 7.பவ்யாஸ்ரீ (விழுப்புரம்), 8.நவீனா (அரியலூர்), 9.அட்சயா(தஞ்சாவூர்), 10.கார்த்திக் விஜய் (கிருஷ்ணகிரி). அதேபோல் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டு பிரிவில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 32 ஆயிரத்து 223 பேருக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் இடம் பிடித்திருக்கின்றனர்.

அவர்களின் விவரம் வருமாறு: 1. ரவணி (சேலம்), 2.கிருஷ்ணா அனூப் (கோவை), 3.சரவணன் (வேலூர்), 4.மதுஸ்ரீ (ஈரோடு), 5.சுஜித் (திருப்பூர்), 6.கவின் (ஈரோடு), 7.மாரீஸ்வரன் (விருதுநகர்), 8.சுகந்த் (திருப்பூர்), 9. ஹரிராஜ் (ராணிப்பேட்டை), 10. ஹரிஷ் (தஞ்சாவூர்). தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்ணை முதல் 10 இடங்களை பெற்றவர்கள் உள்பட 65 பேர் எடுத்திருந்தனர். இவர்களில் 58 பேர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழும், 7 பேர் பிற வாரியங்களின் பாடத்திட்டத்தின் கீழும் படித்தவர்கள் ஆவர். கடந்த ஆண்டு 102 பேர் 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பித்தவர்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து கொள்ள இன்று (வியாழக்கிழமை) முதல் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு வரும் 22ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி செப்டம்பர் 11ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதலில் அரசு பள்ளிகளில் படித்த சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு 22, 23ம் தேதிகளிலும், பொதுப் பிரிவினரில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு 25ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

அதன் பின்னர் பொது கலந்தாய்வு வருகிற 29ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 3ம் தேதி வரை நடக்கிறது. துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலும், எஸ்.சி.ஏ. காலியிடம், எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு 10, 11ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது. நடப்பு கல்வியாண்டில் எவ்வளவு கல்லூரிகள் இருக்கின்றன?, அந்த கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன? என்பது போன்ற முழு விவரங்கள் (சீட் மேட்ரிக்ஸ்) வருகிற 15ம் தேதிக்குள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வீரராகவராவ் தெரிவித்தார். மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யும் பட்டியலில் அதிகமான கல்லூரிகளை தேர்வு செய்ய அவர் வேண்டுகோளும் விடுத்தார்.

விண்ணப்ப பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 2,53,954
விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் எண்ணிக்கை 2,09,645
ரேண்டம் எண் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,645
சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,645
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 1,99,868
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 9,777

* பொதுப்பிரிவில் 3 சுற்றுகள் கலந்தாய்வு நடைபெறும். அதன் விவரம்
முதல் சுற்று
கட்-ஆஃப் மதிப்–பெண் 200 முதல் 179 வரை உள்ள 26,654 மாண–வர்–கள் கலந்து கொள்ள தகுதி பெற்–றுள்–ள–னர்.
விருப்–பக் கல்–லூ–ரியை தேர்வு செய்–தல் ஜூலை 29-31
தற்–கா–லிக ஒதுக்–கீட்டு ஆணை ஆக.1
தற்–கா–லிக ஒதுக்–கீட்டு ஆணையை உறுதி செய்–தல் ஆக.1- ஆக.2
இறுதி ஒதுக்–கீட்டு ஆணை ஆக.3
கல்–லூ–ரி–யில் சேர வேண்–டிய நாள் ஆக.7

இரண்டாம் சுற்று
கட்-ஆஃப் 178.975 முதல் 142.00 வரை 77,947 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல் ஆக.10-12
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆக.13
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல் ஆக.13-14
இறுதி ஒதுக்கீட்டு ஆணை ஆக.15
கல்லூரியில் சேர வேண்டிய நாள் ஆக.20

மூன்றாம் சுற்று
கட்-ஆஃப் 141.955 முதல் 77.50 வரை 92,999 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல் ஆக. 23-25
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆக.26
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல் ஆக.26-27
இறுதி ஒதுக்கீட்டு ஆணை ஆக.28
கல்லூரியில் சேர வேண்டிய நாள் செப்.1

Related posts

கேரளா வாலிபருக்கு குரங்கம்மை அறிகுறி

10 ஆண்டுகளுக்கு பின் பேரவை தேர்தல் ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு புதிய இயக்குநர்