Tuesday, September 17, 2024
Home » 836 இன்ஜினியரிங் இடங்கள் நிரம்பின: பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடக்கம்

836 இன்ஜினியரிங் இடங்கள் நிரம்பின: பொதுப்பிரிவு, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடக்கம்

by Ranjith

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 433 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 22ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வும் நடந்தது. மொத்தமுள்ள 9 ஆயிரத்து 639 இடங்களில் 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

இதில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவில் 92 மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கி 3 சுற்றுகளாக நடக்கிறது. முதல் சுற்று கலந்தாய்வு இன்று தொடங்கி ஆக.10ம் தேதி வரை நடக்கிறது. இதில், பொதுப்பிரிவில் தரவரிசை பட்டியலில் 26 ஆயிரத்து 654 வரையிலான இடங்களை பிடித்த மாணவர்களும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் முதல் ஆயிரத்து 343 இடங்களை பிடித்த மாணவர்களும் பங்கேற்கின்றனர்.

மாணவர்கள் தங்களுடைய விருப்ப கல்லூரிகளை வருகிற 31ம் தேதி வரையில் தேர்வு செய்யலாம். விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீடு ஆணை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு முன்னதாக வெளியிடப்படும். தற்காலிக ஒதுக்கீடு ஆணையை உறுதி செய்ய மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதன்பிறகு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி காலை இன்ஜினியரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும்.

இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள், ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்று விருப்ப கல்லூரிகளுக்காக காத்திருக்க விரும்பினால், மாணவர் சேர்க்கை சேவை மையத்தில் (டி.எப்.சி.) உரிய கட்டணம் செலுத்தி விருப்ப பட்டியலில் மேல்நோக்கிய கல்லூரிகளுக்காக காத்திருக்க ஆகஸ்ட் 7ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.

You may also like

Leave a Comment

20 − nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi