பெங்களூரு: கர்நாடக மாநிலம் பீதரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் நேற்று கலாச்சார நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஜெய் ஸ்ரீராம் பாடல் ஒலிக்கப்பட்டது. ஜெய் ஸ்ரீராம் பாடலை கேட்டதுமே, அதற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த பாடலை நிறுத்துமாறு வலியுறுத்தினர். அதற்கு மாணவர்களில் மற்றொரு பிரிவினர் மறுக்கவே, இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது சண்டையாக மாறியது. இரு பிரிவு மாணவர்களும் கடுமையாக தாக்கிக்கொள்ள மோதல் முற்றியது.
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களின் சண்டையை தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலில் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த அமைச்சர்கள் ஈஸ்வர் கண்ட்ரே மற்றும் ரஹீம் கான் ஆகிய இருவரும் கல்லூரிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பதற்றத்தை தணித்தனர்.