இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த வீரராகவராவ்,” பொறியியல் கலந்தாய்வு வரும் 22-ம் தேதி முதல் செப்.11 வரை நடைபெறுகிறது. ஜூலை 22,23ல் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 25ல் இருந்து ஜூலை 27ம் தேதி வரை பொது சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 29 முதல் செப்.3 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். செப்.6 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் துணை கலந்தாய்வு நடைபெறும். பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக 21,946 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் தரவரிசையில் சேலம் மாணவி ராவணி முதலிடம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசையில் கோவை மாணவி கிருஷ்ணா அனூப் 2-வதுஇடம், காட்பாடியைச் சேர்ந்த சரவணன் 3-வது இடம் பிடித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசையில் திருப்பூரைச் சேர்ந்த சுஜித் 4-வது இடம், ஈரோட்டைச் சேர்ந்த கவின் 5-வது இடம் வகித்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் 36,532 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியலில் 65 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.