அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளிவைக்க வேண்டும்: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிதாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும். வழக்கை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

வங்கி ஆவணங்களை கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். இதையடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்