திண்டிவனம்: பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று அளித்த பேட்டி: கர்நாடகாவில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படுமென அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு காந்தியடிகள் பிறந்த நாளில் தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஆசிரியர்கள், வருவாய் துறையினரை பயன்படுத்தினால் 45 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்திடலாம்.
தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக பட்டியலினத்தை சார்ந்த கோவி.செழியன் உயர்கல்வி துறை அமைச்சராகியுள்ளார். இது பட்டியலினத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம். நகர்ப்புற உள்ளாட்சியுடன் ஊரக உள்ளாட்சியை இணைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். மதுவிலக்கிற்காக யார் போராடினாலும் அதை நானும் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, ‘பாஜகவின் நிழலில் பாமக இருப்பதால் தைலாபுரத்திற்கு அமலாக்க துறை வருவதில்லை’ என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளாரே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ், ‘எந்த அமலாக்கதுறையும் இங்கு வரமுடியாது. இது பாமகவின் கோட்டை. இங்கு மரத்தின் நிழல் மட்டுமே உள்ளது. அப்படி எந்த ஒரு நிழலையும் நுழைய விடமாட்டேன்’ என்று சவால் விடுத்தார்.